வெள்ளக்கோவில்,ஏப்.8: முத்தூரில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.4.96 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மக்களவைத் தொகுதிக்குட்டபட்டது,காங்கயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆறு தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாலை 4.30 மணியளவில் முத்தூர் பஸ்நிலையம் அருகே, வெள்ளகோவில் கூட்டுறவுத்துறை பதிவாளர் கவிதா தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் இருந்து நாமக்கல் செல்ல வந்த லாரியைச் சோதனை செய்தனர். இதில் நாமக்கல் நல்லகவுண்டன்பாளையம், ராமசாமி(48) என்பவரிடம் இருந்து ரூ.4,96,140 கைப்பற்றப்பட்டது. பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து காங்கயம் தாசில்தார் விவேகானந்தனிடம் ஒப்படைந்தனர்.