×

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தி வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டதை கண்டித்து மறியல்

விழுப்புரம், மார்ச் 27:  விழுப்புரம் அருகே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை இழிவாக பேசி வீடியோ வெளியிட்டதை கண்டித்து சாலை மறியல் நடந்தது.விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள சொரப்பூரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (35). இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை பற்றி இழிவாக பேசி அதனை வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார். இது அப்பகுதி மக்களிடையே வைரலாக பரவியது. இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் நேற்று காலை சொரப்பூர் பிள்ளையார் கோயில் பஸ் நிறுத்தம் அருகில் திரண்டு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழ்செல்வன் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதன் காரணமாக ராம்பாக்கம்- மடுகரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் டிஎஸ்பி திருமால், வளவனூர் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை