×

கோடைகாலம் தொடங்கி விட்டது முதியோர், சர்க்கரை நோயாளிகள் ெவயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

திருவண்ணாமலை, மார்ச் 7: கோடைகாலம் தொடங்கி விட்டதால் முதியோர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றும், இன்றும் வழக்கமான வெப்ப நிலையைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வெண்டும். தாகம் இல்லாவிடினும், அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும். உடலை இறுக்கிப் பிடிக்காத, தளர்வான, வெளிர் நிறத்திலான பருத்தி ஆடைகளை அணிய வெண்டும்.

வீட்டின் ஜன்னல் கதவுகளுக்கு திரைச்சீலை அமைத்திருப்பின் பகல் நேரங்களில் அவற்றை மூடிய நிலையிலும். இரவு நேரங்களில் அவற்றை விலக்கி வைத்து வீட்டினை குளுமையாக இருக்கும் வகையில் பராமரித்துக் கொள்ள வேண்டும். வெளியில் செல்லும் போது குடை அல்லது தொப்பியை பயன்படுத்துவதுடன், காலணியும் அணிந்து செல்ல வேண்டும். கோடை காலத்தில் இளநீர், நுங்கு, தர்பூசணி, மோர் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும். வெளியில் பயணம் மேற்கொள்ளும்போது உடன் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும். மது, தேனீர், காபி மற்றும் செயற்கை மென் பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். அதிக புரத சத்துள்ள உணவு மற்றும் கார வகைகளை தவிர்க்க வேண்டும்.

வயதானவர்கள், குழந்தைகள், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வெயிலின் தாக்கத்தினால் அதிகமாக பாதிக்கப்படுவர். எனவே, இவர்கள் வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். கோடை வெப்பம் காரணமாக அதிக வியர்வை, தாகம், தசை பிடிப்பு, சோர்வு, மயக்கம் ஆகியவற்றினால் பாதிக்கப்படலாம். வெயிலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக நிழலான குளிர்ந்த பகுதியில் படுக்க வைக்க வேண்டும்.ஆடைகளை தளர செய்ய வேண்டும்.குளிர்ந்த நீர், பழச்சாறு, உப்பு சர்க்கரை கரைசல் போன்றவற்றை அருந்த கொடுக்கலாம். நினைவு இழந்த நிலையில் இருந்தால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான இடத்தில் கட்டி வைத்து அதற்கு தேவையான குடிநீர் மற்றும் தீவனம் அளிக்க வேண்டும். கோடைக் காலத்தில் காட்டுத் தீ ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால், காட்டுப்பகுதி சுற்றியுள்ள பகுதிகளுக்கு தேவையில்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும். கோடை வெப்பம் தொடர்பாக பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 104ல் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags :
× RELATED அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே...