×

விசா முடிவடைந்த நிலையில் திடீர் மாயம் வேலூரில் தங்கியிருந்த பாகிஸ்தான் பெண் எங்கே? உளவுத்துறையினர் தீவிர விசாரணை

வேலூர், மார்ச் 6: விசா முடிவடைந்த நிலையில் வேலூரில் தங்கியிருந்த பாகிஸ்தானிய பெண் திடீரென மாயமானது குறித்து உளவுத்துறை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து தங்கி உள்ளனர். அதேபோல், வேலைக்காகவும், கல்விக்காகவும் வேலூரில் தங்குகின்றனர். இதற்காக, வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் விசா பெற்று வந்து வேலூர் பாஸ்போர்ட் பிரிவில் விவரங்களை சமர்ப்பிக்கின்றனர்.

இந்த விவரங்கள் அவர்கள் தங்கியிருக்கும் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் மூலம் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டினர் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். விசா முடிவடைந்த பிறகு, பாஸ்போர்ட் அலுவலகத்தில் போதிய ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு வெளிநாட்டுக்கு செல்வார்கள். அதேபோல், விசா முடிவடையும் தேதியில் சம்பந்தப்பட்டவர்களை வெளியேற்ற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதேபோல், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் வேலூர் கஸ்பா, வசந்தபுரம் பகுதிகளில் வாடகை வீடு எடுத்து தங்கியிருந்துள்ளார். அவரது விசா காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவடைந்துள்ளது. இதனால், அந்த பெண்ணை இந்தியாவில் இருந்து வெளியேற்ற போலீசார் தேடி சென்றனர்.

அப்போது, அந்த பெண் கடந்த டிசம்பர் மாதமே வேலூரில் இருந்து எங்கேயோ சென்றுவிட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் வேலூர் மாவட்ட பாஸ்போர்ட் பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண் தங்கியிருந்த விவரங்களை சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி போலீசாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தகவலறிந்த உளவுத்துறை போலீசாரும் தங்கள் விசாரணையை தனியாக தொடங்கியுள்ளனர். ஏற்கனவே, கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வேலூரில் பொய்யான முகவரியில் பெண் உட்பட 5 பேருக்கு பாஸ்போர்ட் வினியோகம் செய்யப்பட்டிருப்பது குறித்து டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் வேலூர் தலைமை பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது விசா முடிவடைந்த நிலையில் பாகிஸ்தான் பெண் வேலூரில் இருந்து திடீரென மாயமாகியிருப்பது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Vellore ,Pakistani ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...