கரூர், பிப்.28: கரூர் மாவட்டம், சின்னமநாயக்கன்பட்டியில் செயல்படாமல் உள்ள மினி மேல்நிலைத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் அடுத்த புலியூர் அருகே சின்னமநாயக்கன்பட்டி பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி மக்கள் குடிநீர் பயன்பாட்டிற்காக மினி மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டு அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. பொதுமக்களும் தங்கு தடையின்றி குடிநீரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த தொட்டியின் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக இந்த பகுதியினர் கூறுகின்றனர். மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் சப்ளை வழங்காததால் இந்த பகுதியை சுற்றிலும் உள்ள நான்கு தெரு மக்களும் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். மேலும், குடிநீருக்காக பல இடங்களிலும் அலைந்து திரியும் நிலையும் உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, இந்த தொட்டியை சுத்தம் செய்து, இதன் மூலம் பகுதி மக்களுக்கு குடிநீர் சப்ளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டால் வசதியாக இருக்கும் எனவும் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அதிகாரிகள் பார்வையிட்டு இந்த தொட்டியை திரும்பவும் பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.