×

ஓடும் பஸ்சில் போலீஸ்காரர் மனைவி உள்பட 2 பெண்களிடம் பணம் பறிப்பு

திங்கள்சந்தை, பிப்.12:  நாகர்கோவில் வடசேரி குன்னுவிளையை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் திருநெல்வேலி ஆயுதப்படையில் போலீஸ்காரராக உள்ளார். அங்குள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி சுஜி ஷாலினி (31). குமரி மாவட்டம் திங்கள்சந்தையில் உள்ள தனது உறவினரிடம் கொடுத்து இருந்த ரூ.2.25 லட்சத்தை திரும்ப வாங்கிக் கொண்டு நேற்று முன்தினம் காலை ஷாலினி பஸ்சில் நாகர்கோவில் வந்து கொண்டு இருந்தார். பணத்தை பேக்கில் வைத்து இருந்தார்.
அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி இவரது பேக்கில் இருந்த பணத்தை மர்ம நபர் அபேஸ் செய்து சென்றார். பேக்கின் அடிப்பகுதியை பிளேடால் அறுத்து பணத்தை திருடி இருந்தனர். சுங்கான்கடை அருகே வரும் போது தான் பணம் திருடப்பட்டு இருந்ததை பார்த்து ஷாலினி கூச்சலிட்டார். பின்னர் இது குறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இதே போல் தக்கலை அடுத்த மூலச்சல் பகுதியை சேர்ந்த ஷீலா (43) என்பவர் சுய உதவிக்குழு பணம் ரூ.86 ஆயிரத்தை பேக்கில் வைத்து கொண்டு நாகர்கோவிலுக்கு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார்.  அப்போது பஸ்சில் இவரிடம் இருந்த பணத்தை மர்ம நபர் அபேஸ் செய்தார். இந்த சம்பவத்திலும் பேக்கை பிளேடால் அறுத்து கைவரிசை காட்டப்பட்டு இருந்தது. இது குறித்தும் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் சமீப காலமாக கோயில்கள், பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டுவது அதிகரித்துள்ளது. எனவே இதை தடுக்கும் வகையில் போலீசார் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : women ,policeman ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...