வானூர், ஜன. 31: வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்ரோடு முக்கிய பகுதியாக உள்ளதால் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. சேதராப்பட்டு தொழிற்பேட்டைக்கு ஏராளமான வாகனங்கள் வந்தவண்ணம் உள்ளது. இந்த சாலையின் குறுக்கே மாடுகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக படுத்துள்ளன.
இதனால் வாகனங்களில் வருபவர்கள் அவைகள் கலைந்து செல்வதற்காக ஒலி எழுப்பினால் மாடுகள் திடீரென குறுக்காக ஓடுகிறது. அந்த நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மோதி விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. மேலும் இரவில் மாடுகள் சாலையில் படுத்து இருப்பது தெரியாததால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சுற்றித்திரியும் மாடுகளை கண்காணித்து அவற்றை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.