×

மதுபாட்டில் ஏற்றி சென்ற லாரி மோதி விவசாயி சாவு

திருவெண்ணெய்நல்லூர், ஜன. 30:  திருவெண்ணெய்நல்லூர் அருகே மதுபாட்டில் ஏற்றி சென்ற லாரி மோதி ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரசூர் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் அய்யனார்(49), விவசாயி. இவர் நேற்று காலை தனது நிலத்தில் உளுந்து அறுவடை செய்வதற்காக மனைவி சுசீலா(46)வுடன் மாட்டு வண்டியில் சென்றுள்ளார். அதே ஊரைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் ராஜாராமன், தனகோடி மகன் மோகன் (39) ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். ராஜாராமன் வண்டியை ஓட்டி சென்றுள்ளார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை நோக்கி சென்றுள்ளனர். அப்போது பின்னால் டாஸ்மாக் மது பாட்டில் லோடு ஏற்றி வந்த டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக மாட்டு வண்டியின் பின்னால் மோதியது.

இதில் மாட்டு வண்டியில் சென்ற 4 பேரும் படுகாயமடைந்தனர். இதில் அய்யனார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இதுபற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்து கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான அய்யனாரின் உடலை கைப்பற்றி தனியார் ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி அய்யனாரின் உறவினர் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) பத்மா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்.

Tags : Larry Kitty ,
× RELATED லாரி மோதி முன்னாள் ராணுவ வீரர் சாவு