கரூர், ஜன.3: கரூரில் பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளம் மூடப்படாததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கரூர் கருப்பாயி கோயில் தெருவில் பாதாள சாக்கடை குழாய் இணைப்பு பணி நடைபெற்றது. இதற்காக குறுக்கும், நெடுக்குமாக தோண்டப்பட்ட குழிகளை சரியாக மூடாமல் சென்றுவிட்டனர். சாலையை தார்ப்பூசி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும். ஆனால், அதனை செய்வதில்லை. இதனால் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறியபடி செல்கின்றனர். மேலும் வாகனம் ஓட்டுபவர்களின் முதுகு பாதிக்கப்படுவதுடன் வாகனங்களும் அடிக்கடி பழுதாகிறது. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை உடனடியாக மூடி சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.