×

ஒட்டன்சத்திரத்தில் ரூ.1 கோடி செலவில் சார்பு நீதிமன்றம் அரசாணை வெளியீடு

ஒட்டன்சத்திரம், டிச. 28: ஒட்டன்சத்திரத்தில் ரூ. 1 கோடி செலவில் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி 2006-2011 தி.மு.கழக ஆட்சியில் 2007ம் ஆண்டு மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும், 2010ம் ஆண்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றமும் கொண்டு வரப்பட்டு ஒட்டன்சத்திரத்தில் செயல்பட்டு வருகிறது.ஒட்டன்சத்திரம் வட்டார எல்லைக்கு உட்பட்ட சார்பு நீதிமன்றம் பழநி நகரில் செயல்பட்டு வருகிறது. பழநி நகரானது ஒட்டன்சத்திரத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒட்டன்சத்திரம் முதல் பழநி வரை செல்லும் பயண நேரம் சுமார் 1 மணி நேரம் ஆகும். இதனால் பொதுமக்களும், வக்கீல்களும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். காவல்துறையினரும் கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதிலும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் ஒட்டன்சத்திரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திலும், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தால் வழங்கப்படும் உத்தரவுகளுக்கும், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தால் வழங்கப்படும் உத்தரவுகளுக்கும் மேல்முறையீடு செய்யவும், வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், குடும்ப நல வழக்குகள் போன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு பரிகாரம் தேடுவதற்கும் பழநி சார்பு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அவ்வாறு ஒட்டன்சத்திரத்திலிருந்து பழநி சென்று வருவதால் காலதாமதம் ஏற்படுவதுடன் தீர்ப்பு வழங்குவதிலும் கால தாமதம் ஏற்பட்டு வந்தது.

ஒட்டன்சத்திரம் வக்கீல்கள் சங்கம் சார்பாகவும், பொதுமக்களும் நகரில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையை ஏற்று சட்டமன்ற கூட்டத் தொடர்களில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தார். அதன்பேரில் சார்பு நீதிமன்றம் அமைக்க சட்டப் பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. தற்போது ரூ.1 கோடி செலவில் சார்பு நீதிமன்றம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் வக்கீல்கள் சங்கம் சார்பாகவும், பொதுமக்களும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டுமென சக்கரபாணி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

Tags : court ,proclamation ,
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...