×

மார்த்தாண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி திருச்சி வாலிபர் பலி

மார்த்தாண்டம், டிச. 25: மார்த்தாண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி திருச்சி வாலிபர் பலியானார்.மார்த்தாண்டத்தில்   கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பிளாட்பார கடைகள் பல முளைத்துள்ளன. பல்வேறு   பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து வியாபாரம் செய்து   வருகின்றனர். இதுபோல திருச்சி மாவட்டம் துவரன்குறிச்சியை சேர்ந்த  துணி   வியாபாரிகள் கடந்த ஒரு வாரமாக சாலையோரம் துணி வியாபாரம் செய்து    வருகின்றனர். இவர்கள் அருகில் உள்ள லாட்ஜ்களில் தங்கி உள்ளனர். இந்த  நிலையில் நேற்று  காலை ஷேக் அப்துல்லா(21) என்பவர் தனது நண்பர்களுடன்  ஞாறாம்விளை  நேசமணி  பாலம் அருகே தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.  அப்போது   நண்பர்களிடையே போட்டியிட்டு ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு  நீச்சலடித்து  சென்று திரும்பி கொண்டிருந்தனர்.  அப்போது ஷேக் அப்துல்லா  அணிந்திருந்த  ஆடை காலில் சிக்கி நீந்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால்  அவர் நீரில்  மூழ்கினார்.

ஷேக் அப்துல்லா கரை சேராமல் நீரில்  மூழ்கியதை கண்ட  நண்பர்கள் குழித்துறை தீயணைப்பு நிலையம் மற்றும்   மார்த்தாண்டம் காவல்  நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள்  சம்பவ இடம் வந்து  தேடினர். சுமார் அரை மணிநேர தேடுதலுக்கு பின்னர் ஷேக்   அப்துல்லா சடலமாக  மீட்கப்பட்டார். மார்த்தாண்டம் போலீஸ்  இன்ஸ்பெக்டர்  செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வர பிள்ளை மற்றும்  போலீசார் சம்பவ   இடம் வந்து விசாரித்தனர். மேலும் சடலத்தை கைப்பற்றி  குழித்துறை அரசு  மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி  வைத்தனர்.  திருச்சியில்  உள்ள ேஷக் அப்துல்லாவின் உறவினர்களுக்கும் தகவல்   தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆற்றில்  மூழ்கி உயிரிழந்த ஷேக் அப்துல்லா  திருச்சியில் உள்ள ஒரு  இன்ஜினியரிங்  கல்லூரி ஒன்றில் பிஇ இறுதியாண்டு  பயின்று வந்துள்ளார். சீசன் நேரங்களிலும்,  விடுமுறை நாட்களிலும் இதுபோல  வியாபாரத்தில்  ஈடுபடுவதாகவும் அவரது  நண்பர்கள் தெரிவித்தனர்.

Tags : Trichy ,Thamiraparani ,river ,Marthandam ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...