×

நெல்லை கோட்டத்தில் 2 மாதங்களாக ஊதியமின்றி வாடும் வேட்டை தடுப்பு காவலர்கள்

நெல்லை, டிச. 18:   வனத்துறையில் பணியாற்றும் வேட்டை  தடுப்பு காவலர்களின் பங்கு முக்கியமானது. இவர்கள் வனப் பகுதிகளில் வேட்டையை தடுப்பது, குடியிருப்பு  பகுதிகளில் பாம்பு புகுந்து விட்டால் பிடிப்பது, மான் உள்ளிட்ட வன  விலங்குகள் கிராமங்களில் நுழைந்தாலோ, விபத்தில் சிக்கினாலோ, கிணறுகளில்  விழுந்தாலோ அவற்றை காப்பாற்றி வனப்பகுதியில் விடுவது, வனப்பகுதியில்  ரோந்து சுற்றி வருவது, வனப்பகுதிகளில் வேட்டையை தடுப்பது, உயர் அதிகாரிகளுக்கு வன பாதுகாப்பு, வேட்டை குறித்து அவ்வப்போது தகவல் தெரிவிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.  இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில்  வழங்கப்படுகிறது. இதில் 10 ஆண்டு முடித்த வேட்டை தடுப்பு காவலர்கள் படிப்படியாக சீனியாரிட்டி அடிப்படையில் வாட்சர்  பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவது வழக்கம்.

வனத்துறையின் நெல்லை  கோட்டத்தில் கடையநல்லூர், புளியங்குடி, சிவகிரி, செங்கோட்டை, நெல்லை ஆகிய  வனச்சரகங்களில் 33 வேட்டை தடுப்பு காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த  வேட்டை தடுப்பு காவலர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் இதுவரை ஊதியம்  வழங்கப்படவில்லை. அக்டோபர், நவம்பர் மாதங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது டிசம்பர் மாதம் 10ம் தேதி கடந்து விட்டது. 70 நாட்களாகியும் இன்னும் ஒரு மாத ஊதியம் கூட பெற முடியாத நிலையில் ஊதியமின்றி வேட்டை தடுப்பு காவலர்கள் திண்டாடி வருகின்றனர்.

அதே நேரத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மாதா மாதம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ஊதியத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஓராண்டுக்கு தேவையான நிதியை அரசு ஒதுக்கி விடுகிறது. எனினும் ஊதியம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.  எனவே வனத்துறை உயர் அதிகாரிகள் வேட்டை தடுப்பு காவலர்கள் ஊதியமின்றி வாடும் நிலை கருதி அவர்களுக்கு உடனே ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  எதிர்பார்க்கின்றனர்.

Tags : Hunters ,Nellai Division ,
× RELATED முயல் வேட்டையாடிய இருவருக்கு ₹10,000 அபராதம்