திருவெண்ணெய்நல்லூர், டிச. 12: திருவெண்ணெய்நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு நேற்று அடிப்படை வசதி வேண்டி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. நேற்று இரண்டாவது நாளாக சித்தலிங்கமடம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. இதில் சொந்த மாவட்டத்திற்கு பணி மாறுதல், கிராம நிர்வாக அலுவலகத்தில் மின்சாரம், குடிநீர், கழிவறை, கணினி, இணையதள வசதி உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்ட தலைவர் லோகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் கண்ணதாசன், வட்ட பொருளாளர் விமல், இணை செயலாளர்கள் பாரதிராஜா, ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பார்த்திபன் வரவேற்றார்.
இதில் அமைப்பு செயலாளர் ஏழுமலை, மகளிர் அணி செயலாளர் ரேகா உள்ளிட்ட குறுவட்ட வி.ஏ.ஓக்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து தினமும் காலை 10 முதல் மாலை 5 வரை மக்களை தேடி என்ற தலைப்பின் கீழ் விளக்க கூட்டம் நடைபெறும் என சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.