கோவை, நவ. 30: கோவை சுந்தராபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என கலெக்டர் உறுதி அளித்ததை தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. கோவை குறிச்சி சுந்தராபுரம் சங்கம் வீதியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டாஸ்மாக் நிர்வாகத்தை எதிர்த்து சுந்தராபுரம் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி அனைத்து கட்சி நிர்வாகிகள் அறிவித்தனர்.
இதற்கிடையில், குறிச்சி நகராட்சி முன்னாள் தலைவர் பிரபாகரன் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரனை நேற்று நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், சுந்தராபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படாது என உறுதிஅளித்தார். இதையடுத்து, உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது என அனைத்து கட்சி நிர்வாகிகள் அறிவித்தனர். மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கும்போது, தி.மு.கவை சேர்ந்த வானவில் கனகராஜ், குணசேகரன், மனோகரன், ராஜா, வி.எச்.பி சரவணன், பா.ஜ.க.வை சேர்ந்த வசந்தராஜ், கமல்பாலன், ராஜமாணிக்கம், சிவபிரகாஷ், முக்குலத்தோர் புலிப்படை குறிச்சி கோபி, மருது பாலாஜி உள்பட பலர் உடனிருந்தனர்.