கரூர், நவ. 27: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30ம் தேதி மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என கரூர் ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர் மாவட்ட ஜாக்டோ, ஜியோ சார்பில் வேலை நிறுத்த ஆய்த்த மாநாடு நடைபெற்றது. ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர்கள் இருதயசாமி, சரவணகுமார், குமாரவேல், ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகாவிஷ்ணன், மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் சுப்பிரமணியன், தாமோதரன், ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்படவேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய்கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புறநூலகர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், 21மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை ஆசிரியர்கள் மற்றும் அரசுஊழியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனே வழங்கிடவேண்டும்.
அரசாணை 56ல் இளைஞர்களின் வேலைவாய்ப்பினை பறிக்கக்கூடிய வகையில் பணியாளர்கள் பகுப்பாய்வுக்குழுவினை ரத்து செய்ய வேண்டும்., பள்ளிக்கல்வித்துறை மூலமாக வெயிளிடப்பட்டுள்ள அரசாணை 100, 101ஐ ரத்து செய்யவேண்டும், 5000 அரசுப்பள்ளிகளை மூடுவதை உடனடியாக கைவிட்டு சமூக நீதியினைப் பாதுகாக்க வேண்டும், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி வரும் 30ம் தேதி மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, அடுத்த கட்டமாக டிசம்பர் 4ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.