×

மொபட்டில் வந்த கல்லூரி ஊழியரிடம் தாலி செயின் பறிப்பு

சின்னசேலம், அக். 31: சின்னசேலம் அருகே மொபட்டில் கல்லூரிக்கு வந்த ஊழியரிடம் தாலி செயின் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சின்னசேலம் அருகே நைனார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணி(45). இவர் சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ராமச்சந்திரன், அதே ஊரில் பிசினஸ் செய்து வருகிறார். இந்நிலையில் கலைவாணி நைனார்பாளையத்திலிருந்து சின்னசேலத்தில் உள்ள கல்லூரிக்கு மொபட்டில் வருவது வழக்கம். அதேபோல நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் வழக்கம்போல கலைவாணி கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் பேக்காடு வேகத்தடை அருகில் இவரது மொபட்டை இடித்துள்ளனர். அப்போது நிலை தடுமாறி கலைவாணி கீழே விழுந்துள்ளார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர்கள் கலைவாணி கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்துள்ளனர். கலைவாணி நான் கழற்றி தருகிறேன், என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சி கேட்டும் செயினை பிடுங்கி உள்ளனர். அப்போது செயின் இரண்டாக அறுந்துவிட்டது. அந்த நேரத்தில் அப்பகுதியில் ஆட்கள் வரும் சத்தம் கேட்டதும் அறுந்துபோன சுமார் ஒரு பவுன் செயினை மட்டும் எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதில் கலைவாணிக்கு தலை, கழுத்து, உடல் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. காயம்பட்ட அவர் நைனார்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Tags : Thalai Chain ,college employee ,
× RELATED தனியார் கல்லூரி ஊழியர் வீட்டில் 18 சவரன் துணிகர கொள்ளை