காளையார்கோவில், அக்.17: காளையார்கோவில் அருகே தனியார் பேருந்துக்குள் ஏறி கல்லூரி மாணவரை சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். காளையார்கோவில் அருகே சூசையப்பர்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் சிவக்குமார்(23), தேவகோட்டை தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகின்றார். நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு தேவகோட்டையில் இருந்து காளையார்கோவிலுக்கு தனியார் பேருந்தில் திரும்பினார். ஆண்டிச்சியூரணி கிராமம் விலக்கு அருகில் திடீரென 3 பேர் பேருந்தை வழிமறித்தனர். சிவக்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில் பலத்த காயம் அடைந்த சிவக்குமார் காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதல்கட்ட சிகிச்சைக்கு பின்பு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பஸ்சுக்குள் ஏறி கல்லூரி மாணவரை வெட்டிய சம்பவம் காளையார்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.