தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, சிட்லபாக்கம் பகுதியில் சர்வே எண் 75ல் குளம் ஒன்று இருந்ததாகவும், அந்த குளத்தை கடந்த 30 ஆண்டுகளாக காணவில்லை எனவும் அப்பகுதி மக்கள் சார்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்த புகாரின்பேரில் நேற்று தாம்பரம் தாசில்தார் கவிதா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று நில அளவீடு செய்தபோது, அங்கு உள்ள தனியார் பள்ளியின் முகப்பு பகுதி, சாலை, மூன்று கடைகள், ஒரு வீடு ஆகியவை ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து பள்ளியின் முகப்பு பகுதி, ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடு ஆகியவற்றை அதிகாரிகள், ஊழியர்கள் மூலம் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு இடித்து அகற்றி நிலத்தை மாநகராட்சி கையகப்படுத்தியது. இதன் மூலம் சுமார் ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்கப்பட்ட நிலத்தில் மீண்டும் குளம் அமைத்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.