×

மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து வந்து வயிறு வலிப்பதாக நாடகமாடி காதலனுடன் சிறுமி எஸ்கேப்: கூல் டிரிங்க்ஸ் வாங்கி வந்த கணவன் அதிர்ச்சி

சென்னை, ஏப்.27: மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க வந்த போது, வயிறு வலிப்பதாக கூறி, தனது கணவரிடன் குளிர்பானம் வாங்கி வர சொல்லிவிட்டு, தனது காதலனுடன் சிறுமி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் தாட்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (30). இவர் திருவள்ளூரில் உள்ள செங்காடு பகுதியில் தனியார் பைக் ஷோருமில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவருக்கு உறவினர் பெண்ணான நர்சிங் மாணவியுடன் கடந்த 2ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் பெரிய அளவில் திருமணம் நடந்தது. இதற்கிடையே, கடந்த 21ம் தேதி நாகராஜ், தனது மனைவியுடன் மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க திருவள்ளூரில் இருந்து ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார். பிறகு மெரினா கடற்கரைக்கு செல்ல ரயில் நிலையம் எதிரே உள்ள சாலையில் ஆட்டோ பிடிப்பதற்காக புதுமண தம்பதி நின்று இருந்தனர்.

அப்போது திடீரென தனதுக்கு வயிறு வலிப்பதாக கணவரிடம் கூறிய மனைவி, கூல்ட்ரிங்க்ஸ் ஏதேனும் வாங்கி வாருங்கள் என்று கடைக்கு அனுப்பியுள்ளார். மனைவி கேட்டதால் நாகராஜ் அருகில் உள்ள கடைக்கு சென்று கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி கொண்டு வந்து பார்த்த போது, தனது மனைவி மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரை, செல்போனில் தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பல இடங்களில் தேடியும் மனைவியை காணவில்லை. பின்னர் நடந்த சம்பவத்தை தனது வீட்டிற்கு தெரிவித்துவிட்டு, நாகராஜ் பெரியமேடு காவல் நிலையத்தில் தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார். இதற்கிடையே மாயமான இளம்பெண் நேற்று முன்தினம் புளியந்தோப்பு மன்னன் தெருவை சேர்ந்த அருண்குமார் (19) என்பவருடன் பெரியமேடு காவல் நிலையத்தில் ஆஜராகினார்.

போலீசார் இளம் பெண்ணிடம் விசாரணை நடத்திய போது, ‘ நர்சிங் கல்லூரியில் படிக்கும் போது, அருண்குமாரை உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாகவும், ஆனால் தனது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததால், உடனே எனது விருப்பத்திற்கு மாறாக உறவினரான நாகராஜூக்கு அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்துவிட்டனர். எனது காதலனை என்னால் மறக்க முடியாததால், திட்டமிட்டு எனது கணவரை மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க வேண்டும் என்று அழைத்து வந்து, வயிறு வலிப்பதாக கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி வர சொல்லி கடைக்கு அனுப்பிவிட்டு, ஏற்கனவே எனது காதலன் அருண்குமாருக்கு போன் மூலம் அளித்த தகவலின் படி, அவரை வரவழைத்து அவருடன் சென்றது தெரியவந்தது. அதேநேரம், திருமணமான இளம் பெண் 17 வயது சிறுமி என்று தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் இந்த வழக்கை வேப்பேரி அனைத்து மகளிர் போலீசாருக்கு மாற்றினர். அதன்படி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் கணவர் நாகராஜ் மற்றும் காதலன் அருண்குமார் மீது ஐபிசி 366 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து வந்து வயிறு வலிப்பதாக நாடகமாடி காதலனுடன் சிறுமி எஸ்கேப்: கூல் டிரிங்க்ஸ் வாங்கி வந்த கணவன் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Marina ,Chennai ,Marina beach ,Tiruvallur ,Thadko Nagar ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்