பெங்களூரு: லஞ்ச வழக்கில் தேடப்பட்டு வரும் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. விருபாக்சப்பா 48 மணி நேரத்தில் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக எம்.எல்.ஏ. விருபாக்சப்பாவுக்கு 2 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கிய நீதிமன்றம், போலீசில் சரணடைய உத்தரவிட்டுள்ளது. பாஜக எம்எல்ஏவான மதல் விருபாக்சப்பா, கர்நாடகா அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவரின் மகன் பிரசாந்த் மதல் பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் தலைமை கணக்காளராக பணியாற்றி வருகிறார்.
இவர் கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட்டின் டெண்டர் வழங்க ஒருவரிடம் இருந்து ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது லோக் ஆயுக்தா போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது, அலுவலகத்தில் இருந்து ரூ.1.70 கோடியும், வீட்டில் இருந்து ரூ.6 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது. கர்நாடக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பிரசாந்த் மதல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் இந்த விவகாரத்தில் பாஜக எம்எல்ஏவான மதல் விருபாக்சப்பாவிடமும் லோக்ஆயுக்தா விசாரிக்கலாம் என கூறப்பட்டது. இந்நிலையில், லஞ்ச வழக்கில் தேடப்பட்டு வரும் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. விருபாக்சப்பா 48 மணி நேரத்தில் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக எம்.எல்.ஏ. விருபாக்சப்பா போலீசில் சரணடைந்து விசாரணையை எதிர்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.