திருவள்ளூர்: சென்னை, முகப்பேர், வேலம்மாள் முதன்மை பள்ளியில் டங்கிங் டெவில்ஸ் சாகச விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் தலைமை தாங்கினார். முன்னதாக முதன்மை முதல்வர் கே.எஸ்.பொன்மதி வரவேற்றார். இதில் உலகப் புகழ்பெற்ற ஸ்லோவேனியா நாட்டைச் சார்ந்த கூடைபந்து விளையாட்டு அணியான டங்கிங் டெவில்ஸ் வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. உலகப்புகழ்பெற்ற அக்ரோபாட்டிக்ஸ் மற்றும் டங்கர்களின் குழுவே இந்த டங்கிங் டெவில்ஸ் விளையாட்டாகும். அதாவது உயர பறந்து, பறந்து பந்தை கோல் போடும் சாகசம் மற்றும் ஈர்ப்பு விசையை மீறும் நிகழ்ச்சிகள் இதில் இடம் பெற்றன.
இந்த விளையாட்டின் மூலம் உடலை கட்டுக்கோப்பாகவும், வளைந்து நெளிந்து, பல்டி அடித்து பந்தை கோல் போடும் விளையாட்டை பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பார்த்து வியந்தனர். மேலும் இந்த விளையாட்டு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. டங்கிங் டெவில்ஸ் அணியின் வியப்பை ஏற்படுத்தும் சாகச காட்சிகள் கண்களை ஈர்க்கக்கூடிய வகையிலும் விளையாட்டு, நடனம் மற்றும் பொழுது போக்கின் தனித்துவமான கலவையாக அமைந்து காண்பவர்களின் மனதை கவர்ந்திழுத்ததாக மாணவர்கள் கூறினர்.