சித்ரகுட்,(உ.பி): உத்தரபிரதேச மாநிலம் மெள தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ் அன்சாரி பணமோசடி வழக்கில் கடந்த 3 மாதங்களாக ரகவுலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி நிகத் அன்சாரி சிறையில் உள்ள தனது கணவரை சந்திக்க சென்றுள்ளார். ரகவுலி சிறையின் துணைகண்காணிப்பாளர் அறையில் நிகாத் அன்சாரி தன் கணவரை சந்தித்து உள்ளார். இதுகுறித்து ரகவுலி காவல்நிலைய பொறுப்பாளரான சப்-இன்ஸ்பெக்டர் ஷியாம்தேவ் சிங் அளித்த புகாரின் அடிப்படையில், சிறை கண்காணிப்பாளர் அசோக் சாகர், துணை ஜெயிலர், ஒரு காவலர், நிகாத் அன்சாரி, மற்றும் அவரது ஓட்டுநர் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நிகாத் அன்சாரி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடமிருந்து செல்போன், சவுதி அரேபியா கரன்சி நோட்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு பின் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் சித்ரகுட் காவல் கண்காணிப்பாளர் விருத்த சுக்லா தெரிவித்துள்ளார்.