×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10ம் தேதி ஆர்ப்பாட்டம்: ஏஐடியுசி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் (ஏஐடியுசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை, கும்பகோணம், நெல்லை, திண்டுக்கல், கரூர், திருச்சி, மதுரை, காரைக்குடி, நீலகிரி, புதுக்கோட்டை ஆகிய மண்டலங்களில் நமது ஓய்வூதியர் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதர மண்டலங்களில் உருவாக்கிட வேண்டும்.

ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் உயிர்வாழ் சான்றிதழ் 2023 ஜனவரி 2ம் தேதி முதல் மார்ச் 14 வரை அளிக்க வேண்டும். அனைத்து மண்டலங்களிலும் ஓய்வூதியர் உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும். 2023 ஜனவரி 10ம் தேதி அனைத்து மண்டல தலைமையகங்கள் முன்பாக ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். சமூக சேவையில் ஈடுபட்டு வரும் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் அனைவருக்கும் ஓய்வூதியம், அரசு பொறுப்பேற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும்,

ஏழு ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ள அகவிலைப்படி உயர்வை போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டும், ஓய்வுகால பண பலன்கள் இரண்டு ஆண்டுகளாக வழங்காமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்து வரும் ஜனவரி 10ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தி தமிழக முதல்வர் விலாசமிட்டு அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரடியாகவும் பதிவு தபால் அஞ்சல் மூலமாகவும் மனுக்களை அனுப்ப வேண்டும்.


Tags : AIDUC , Demand, Demonstration, AITUC Notice
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்