பெரம்பூர்: புளியந்தோப்பில் இஸ்லாமிய மாணவி கந்த சஷ்டி கவசம் பாட 18 படிகளுடன் களைகட்டிய ஐயப்பன் கோயில் திருவிழா நடந்தது.
புளியந்தோப்பு சிவராவ் சாலையில் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு புளியந்தோப்பு, பேசின்பிரிட்ஜ், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்து வழிபடுவது வழக்கம். இந்த ஆலயத்தின் நண்பர்கள் குழு சார்பாக 4ம் ஆண்டு ஐயப்ப மலர் பூஜை நேற்று நடந்தது. இதில் சிறப்பு அம்சமாக சபரிமலை போல 18 படிகள் அமைக்கப்பட்டு, அதில் மாலை அணிந்தவர்கள் மட்டும் 18 படிகளில் ஏறி மேலே சென்று ஐயப்பனை தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாவில், அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்கள் பாடி ஐயப்பனுக்கு மலர் பூஜை நடத்தினர். புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 108 பெண்கள் திருவிளக்கு ஏந்தி சிறப்பு பூஜை செய்து ஐயப்பனை வணங்கினர். தொடர்ந்து, ஐயப்பனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, கற்பூர தீபாராதனை காட்டப்பட்டடு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேலும், சபரிமலை போல் சென்னையில் அமைக்கப்பட்ட இந்த அரங்கத்தை காண அந்த பகுதி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வந்தனர்.
புளியந்தோப்பு பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் மலர் பூஜையின் சிறப்பு அம்சமாக புளியந்தோப்பை சேர்ந்த அப்துல் முஜீத் என்பவரின் மகள் ஹூனா கந்த சஷ்டி கவசம் பாடலை பாடினார். இதனை அனைவரும் ரசித்து கேட்டு சிறுமியை பாராட்டினர். புளியந்தோப்பு பகுதி இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதி என்பதால் விநாயகர் சதுர்த்தி, திருப்பதி குடை, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் இந்துகளுடன் சேர்ந்து, இஸ்லாமியர்களும் பண்டிகையை கொண்டாடுவதும், குறிப்பிட்ட அந்த நாளில் அன்னதானங்கள் வழங்கி விழாவை சிறப்பிப்பதும் தொன்று தொட்டு வரும் செயல். அந்த வகையில் ஐயப்ப பூஜையிலும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு உள்ளனர் என இந்து அமைப்பை சேர்ந்த ராமபூபதி தெரிவித்தார்.