திருவொற்றியூர்: மணலி மண்டலம் 19வது வார்டு எம்எம்டிஏ 2வது பிரதான சாலையில் மாநகராட்சி ஆரம்ப பள்ளி உள்ளது. இங்கு 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்டுள்ள இந்த பள்ளி கட்டிடம் தற்போது பல இடங்களில் பழுதாகி ஆபத்தான நிலையில் உள்ளது. குறிப்பாக, மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அதன் வழியாக மழைநீர் கசிந்து வகுப்பறையில் கொட்டுகிறது. இதனால், மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். ஆசிரியர்களும் பாடம் எடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே, இந்த, ஆரம்ப பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தரவேண்டும் என்று வார்டு கவுன்சிலர் காசிநாதன், மணலி மண்டல குழு கூட்டத்தில் தலைவர் ஏ.வி.ஆறுமுகம் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். தற்போது, மழைக்காலம் என்பதால் மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, இந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.