பெங்களூரு: கே.ஜி.எப்., கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம், காந்தாரா என்ற கன்னட படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது. கடந்த 30ம் தேதி வெளியான இந்த படம், கன்னடத்தில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி, கிஷோர், அச்யூத் குமார், பிரமோத் ஷெட்டி, ஷாலினி குரு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் ஹீரோவாக நடித்து, இயக்கியவர் ரிஷப் ஷெட்டி. காந்தாரா, சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்ய நடிகர் பிருத்விராஜ் விரும்பியுள்ளார்.
எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரும் வெற்றியை காந்தாரா படம் பெற்றிருப்பதால் அதனை மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட படத்தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், காந்தாரா படம் இந்தியில் அக்டோபர் 14ம் தேதியும், தெலுங்கு டப்பிங் அக்டோபர் 15ம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழ் மற்றும் மலையாளத்தில் காந்தாரா படத்தை டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ள நிலையில், விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று படக்குழு கூறியுள்ளது.