×

காக்கவாக்கம்-தொளவேடு 10 ஆண்டுகளாக சீரமைக்காத சாலை: சிரமப்படும் வாகன ஓட்டிகள்

ஊத்துக்கோட்டை:  ஊத்துக்கோட்டை  அருகேயுள்ள காக்கவாக்கம் - தொளவேடு கிராம சாலையை  10 ஆண்டாக சீரமைக்கவில்லை என்றும் உடனே சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊத்துக்கோட்டை  அருகே தொளவேடு கிராமத்தில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள், பள்ளி , கல்லூரி மாணவ - மாணவிகள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் வேலைக்கு செல்வதற்கும், விவசாயிகள் கோயம்பேட்டிற்கு பூ , காய்கறி போன்றவற்றை எடுத்து செல்வதற்கும், மாணவ - மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கும் காக்கவாக்கம் - தொளவேடு   கிராம சாலையை பயன்படுத்தி தண்டலம், பாலவாக்கம் பகுதிகளுக்கு   சென்று அங்கிருந்து சென்னை,  திருவள்ளூர், ஊத்துக்கோட்டை , கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கு செல்வார்கள்.

இந்நிலையில் காக்கவாக்கம் - தொளவேடு  கிராம சாலை குண்டும், குழியுமாகவும் , தார்சாலை மண் சாலையாகவும் மாறி  படுமோசமாக காணப்பட்டது  .  இதையறிந்த அப்பகுதி மக்கள் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததின்பேரில்  கடந்த 10 வருடத்திற்கு முன்பு சாலை அமைத்தனர் . ஆனால் கடந்த சில மாதங்களாக பெய்த மழைக்கு  கிராம சாலை  குண்டும் குழியுமாக மாறி பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது . இதனால் வாகனங்களை ஓட்ட இருசக்கரம் , ஆட்டோ, டிராக்டர் போன்ற வாகன ஓட்டிகளும், பள்ளி வாகனங்களும் செல்ல  மிகவும் சிரமப்படுகிறார்கள். இரவு நேரத்தில் பைக்கில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .

இது குறித்து காக்கவாக்கம் - தொளவேடு   பகுதி  மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்திற்கு செல்லும் சாலை  10 வருடத்திற்கு முன்பு போடப்பட்டது  இந்த கிராம  சாலை  மழையால்  குண்டும் குழியுமாக மாறிவிட்டது. அதை சீரமைக்கவில்லை , இந்த சாலைக்கு பதில் புதிய சாலை அமைக்க வேண்டும் என கடந்த 2 வருடத்திற்கு முன்பு  பெரியபாளையம் பிடிஒ அலுவலகத்தில் மனு கொடுத்தோம் .ஆனால் இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கைவில்லை. எனவே பழுதடைந்த சாலைக்கு பதில் புதிய சாலையை அமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

Tags : Kakkavakkam ,Tholavedu , Kakkavakkam-Tholavedu road not repaired for 10 years: motorists suffer
× RELATED ஆரம்ப துணை சுகாதார நிலையம் முன்பு மழைநீர் தேங்குவதால் நோயாளிகள் தவிப்பு