×

மாங்காடு அருகே நடைபயிற்சி சென்றவர் ஆட்டோ மோதி பலி

குன்றத்தூர்: மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், மேட்டு தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (55). இவர், தினமும் காலை வேளையில் தனது வீட்டின் அருகே உள்ள சாலையில் நடைபயிற்சி செய்வது வழக்கம். அதேபோல்,  நேற்று காலையும் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக தறிகெட்டு ஓடி வந்த சரக்கு ஆட்டோ ஒன்று திடீரென அதன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அன்பழகன் மீது பலமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அன்பழகன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்து, விபத்து ஏற்படுத்திய சரக்கு ஆட்டோ ஓட்டுநரை பிடித்த போது தான், அந்த வாகனத்தை ஓட்டி வந்தது 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்த அன்பழகன் உடலை மீட்டு, அதனை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து ஏற்படுத்திய சிறுவனை பிடித்து விசாரித்தபோது 18 வயது பூர்த்தியடையாமல் வாகனத்தை இயக்க வைத்த அந்த வாகனத்தின் உரிமையாளர் சைதாப்பேட்டையை சேர்ந்த ராஜேந்திரன் (41) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், பல நாட்களாக இதே வாகனத்தை சைதாப்பேட்டையில் இருந்து தினமும் இந்த பகுதிக்கு சிறுவன் ஓட்டி வந்து கேன்களில் தண்ணீர் பிடித்து சென்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Tags : Mangadu , A pedestrian was killed in an auto collision near Mangadu
× RELATED மாங்காடு அருகே பரபரப்பு; உறவினரை...