×

மாங்காடு அருகே பரபரப்பு; உறவினரை கொன்று விட்டு நாடகமாடிய வடமாநில கள்ளக்காதல் ஜோடி கைது

குன்றத்தூர்: மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இங்கு மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், பீகார், உத்திரபிரதேசம் ஆகிய வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் குடும்பமாக தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மோகன் புஜக்கர் (38) என்பவர், வீட்டில் தனக்குத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டதாக அவரது உறவினர் பெண் சோனியா (33) என்பவர் மாங்காடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில், மாங்காடு காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம் தலைமையில் விரைந்து சென்ற போலீசார், அந்த மோகன் புஜக்கர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், மோகன் புஜக்கரை யாரோ கத்தியால் குத்தி கொன்றது அறிக்கையில் வந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், சோனியா மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சுசாந்தா பர்மன் (44) ஆகிய 2 பேரை பிடித்து நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மோகன் புஜக்கர் இங்கு தங்கி வேலை செய்து வந்தநிலையில் சோனியாவிற்கும், சுசாந்தா பர்மன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால், சோனியாவை காண அவரது வீட்டிற்கு சுசாந்தாபர்மன் அடிக்கடி வந்து சென்றதால் மோகன் புஜக்கர் அவரை கண்டித்துள்ளார். சம்பவத்தன்றும் சுசாந்தா பர்மன் சோனியா வீட்டிற்கு சென்றபோது, அங்கு வந்த மோகன் புஜக்கர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில், ஆத்திரமடைந்த சுசாந்தாபர்மன், தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மோகன் புஜக்கர் மார்பில் சரமாரியாக குத்தி கொன்றுள்ளார். மேலும், தாங்கள் போலீசில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, அவர்கள் நாடகமாடியதும் அம்பலமானது. இதையடுத்து, சோனியா மற்றும் சுசாந்தா பர்மன் ஆகிய 2 பேரையும், மாங்காடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இசசம்பவம் மாங்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மாங்காடு அருகே பரபரப்பு; உறவினரை கொன்று விட்டு நாடகமாடிய வடமாநில கள்ளக்காதல் ஜோடி கைது appeared first on Dinakaran.

Tags : Bustle ,Mangadu ,Kunradthur ,Kerugambakkam ,northern ,West Bengal, Jharkhand, ,Bihar, Uttar Pradesh ,Jharkhand ,North State ,Dinakaran ,
× RELATED அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு