கும்பக்கரை: கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கானல் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த மாத இறுதியில் பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 31ம் தேதி முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் அறிவித்தனர்.
கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து சீரானது. இதையடுத்து 15 நாட்களுக்குப் பிறகு, நேற்று முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்துள்ளனர். 15 தினங்களுக்கு பின்பு அனுமதி வழங்கப்பட்டதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.