நாகர்கோவில்: ராகுல்காந்தியால் மட்டுமே பாரதிய ஜனதாவுக்கு இறுதி அத்தியாயத்தை எழுத முடியும் என்று கே.எஸ். அழகிரி கூறினார். ராகுல்காந்தியின் முதல் நாள் நடைப்பயணம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று மாலை அளித்த பேட்டி: இந்தியா பூகோள ரீதியாக ஒன்றுபட்டு இருக்கிறது. ஆனால் நாட்டை ஆளும் பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். கூட்டம் மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே இறைவழிபாடு என்கிறார்கள். இந்தியா பல மொழிகள், பல மதங்கள், கலாச்சாரத்தை கொண்ட நாடாகும். இங்கு ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் எப்படி சாத்தியமாகும். இதை மனதில் கொண்டு தான், இந்த கருத்தாக்கத்தை மையமாக வைத்து தான் ராகுல்காந்தி நடைபயணம் தொடங்கி இருக்கிறார். இந்த நடை பயணம் மகத்தான வெற்றி பெறும். ராகுல்காந்தியின் நடைபயணத்தை பாரதிய ஜனதா எப்படி பார்க்கிறது என்பது பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. ராகுல்காந்தியால் மட்டுமே அவர்களுக்கு (பா.ஜ.வுக்கு) இறுதி அத்தியாயத்தை எழுத முடியும். பீகாரில் நிதிஷ்குமார், டெல்லியில் ஆம்ஆத்மி, மகாராஷ்டிராவில் ஏற்கனவே சிவசேனா போன்ற கட்சிகள் பாஜவுக்கு எதிராக வந்து விட்டனர். இவை எல்லாம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.