டொரன்டோ: கனடாவின் டெரோன்டோ நகரில் நடக்கும் நேஷனல் பேங்க் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர், இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் முடிந்தன. மகளிர் இரட்டையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் நேற்று சானியா மிர்சா(இந்தியா)/ மேடிசன் கீஸ்(அமெரிக்கா) இணையுடன் ஷோபியா கெனின்(அமெரிக்கா)/யுலியா புடின்சேவா(கஜகிஸ்தான்) ஆகியோர் மோதினர். அதில் சானியா இணை அதிரடியாக விளையாடி ஒரு மணி 21 நிமிடங்களில் 7-5, 3-6, 10-6(10-8) என்ற செட்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினர்.
ஒற்றையர் பிரிவு முதல் 2 காலிறுதி ஆட்டங்களில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா(14வது ரேங்க்) 2-1 என்ற செட் கணக்கில் சீனா வீராங்கனை கின்வென் செங்கையும்(51வது ரேங்க்), அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா(7வது ரேங்க்) 2-0 என நேர் செட்களில் கஜகிஸ்தான் வீராங்கனை யுலியா புடின்சேவாவையும்(46வது ரேங்க்) வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தனர். அதேபோல் கடைசி 2 காலிறுதி ஆட்டங்களில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலேப் (15வது ரேங்க்) 6-4, 7-6(7-5) என நேர் செட்களில் அமெரிக்க வீராங்கனை கோரி காப்பையும்(11வது ரேங்க்), பிரேசில் வீராங்னை பீட்ரிஸ் ஹடாத் மியா(24வது ரேங்க்) 2-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக்கையும்(12வது ரேங்க்) போராடி வென்று அரையிறுதிக்கு தகுதிப் பெற்றனர்.