×

திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் ரூ.18 கோடியில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவக்கம்அமைச்சர் சேகர்பாபு பேட்டி

பூந்தமல்லி: திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று ரூ.18 கோடி மதிப்பில் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று துவக்கி வைத்தார். பின்னர் பேட்டியில், இன்னும் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவித்தார். சென்னை அருகே திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரியம்மன் திருக்கோயில் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணிகள் துவக்க விழா இன்று காலை கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று, திருப்பணிகளுக்கான பூஜைகளை துவக்கி வைத்தார்.

முன்னதாக, கோயில் மூலவர் உற்சவர் மற்றும் பிரகாரத்தில் உள்ள அனைத்து சன்னதி தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெற்றது. கருமாரியம்மன் கோயிலில் புனரமைப்பு பணிகள் துவங்குவதை முன்னிட்டு பல்வேறு சிறப்பு யாகங்களும் ஹோமங்களும் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ஒவ்வொரு கோயிலிலும் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும்.

திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 2018ம் ஆண்டு ஆகம முறைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்க வேண்டும். கொரோனா தொற்று பரவல் காரணமாக நடைபெறவில்லை. தற்போது இக்கோயிலில் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் பாலாலயம் நடைபெற்றது. இக்கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி, கோயில் பிரகாரத்தை அகலப்படுத்துவது, கோவில் மண்டபம், ராஜகோபுரத்தை கருங்கல்லால் புனரமைப்பது என ரூ.18 கோடி மதிப்பில் திருப்பணிகள் செய்யப்படுகிறது.

சுமார் 2 ஆண்டுகளில் திருப்பணிகள் நிறைவு பெற்று கருமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இதில் திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்இகே.மூர்த்தி, துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், கோயில் இணை ஆணையர் லட்சுமணன், துணை ஆணையர் ஜெயப்பிரியா, முன்னாள் அறங்காவலர் லயன் டி.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Sekarbapu , Thiruverkadu, Karumariamman Temple, Minister Sekarbapu, Kumbabhishek Renovations
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...