சென்னை: அரசு பள்ளிகளிலேயே எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை அமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார் தமிழ்நாட்டில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து நாளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை ஈடுபட உள்ளார். அதிகாரிகளுடன் நடைபெறும் ஆலோசனையில் ஆசிரியர் நியமனம் குறித்தும் அமைச்சர் விவாதிக்க உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. இதனிடையே, அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அறிவித்திருந்தார்.
இதனால் அரசு பள்ளிகளிலேயே எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் நடைபெறும் என்றும் தகுதியான சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்திருந்தார். அங்கன்வாடிகளுக்கு எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகள் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளிலேயே எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் நடைபெறும் என அமைச்சர் அறிவித்தார். முன்பு இருந்ததை விட எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் சிறப்பாக நடைபெறும் என்று கூறிய நிலையில், நாளை ஆலோசனையில் ஈடுபடுகிறார் அமைச்சர். மேலும், வரும் 13-ஆம் தேதி 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.