சென்னை: மதுரை சித்திரை திருவிழா பாதுகாப்பு பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை மாவட்டம், வடக்கிப்பாளையம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிய நாட்ராயன், மதுரை சித்திரை திருவிழா பாதுகாப்பு பணியில் இருந்தபோது, கடந்த 19ம் தேதி அன்று, இரவு 10.30 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் நாட்ராயன் குடும்பத்தாருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு, உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.