சென்னை: மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக நன்மைக்காக ஆன்மிக குரு பங்காரு அடிகளார் வேள்வி பூஜையை நடத்தினார். இதையொட்டி, சித்தர் பீடம் வளாகம் முழுவதும் முக்கோணம் சதுரம், சாய்சதுரம், ஐங்கோணம், அறுகோணம், என் கோணம், வட்டம், ஒற்றை நாகம், இரட்டை நாகம், சூலம், உள்ளிட்ட வடிவங்களில் 1008 வேள்வி குண்டங்கள் அமைக்கும் பணியில் செவ்வாடை பக்தர்கள் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து 15ம் தேதி வெள்ளிக்கிழமை விடியற்காலை 3 மணி அளவில் மங்கல இசையுடன் விழா துவங்கியது. ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன இதனைத் தொடர்ந்து 9 மணி அளவில் சித்தர் பீடத்துக்கு வருகை தந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாரை தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் பாதபூஜை செய்து வரவேற்றனர். அன்னதான நிகழ்ச்சியை ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் செந்தில்குமார் துவங்கி வைத்தார்.
16ம் தேதி சித்ரா பௌர்ணமியான நேற்று ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சித்தர் பீடம் வந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு பாதபூஜை செய்து செவ்வாடை பக்தர்கள் வரவேற்பளித்தனர். மாலை 3 மணி அளவில் ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் வேள்வி சாலையில் கோ பூஜை செய்தார். பின்னர் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு வேள்வி பூஜையை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் முன்னிலையில் தொடங்கி வைத்தார். இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டீக்காராமன் ஏராளமான செவ்வாடை பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாட்டினை ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் ஆதிபராசக்தி இயக்கத் துணைத் தலைவர் தேவி ரமேஷ் மேற்பார்வையில் தஞ்சை மாவட்ட தலைவர் வாசன், சக்தி பீட இணை செயலாளர் ராஜேந்திரன், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆதிபராசக்தி சக்தி பீட சக்திகள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.