×

4 நாட்கள் தொடர் விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் சீசன் மற்றும் ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின. தற்போது பரவல் பெருமளவில் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுக்க தொடங்கியுள்ளனர் கன்னியாகுமரியிலும் சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர் குறிப்பாக நேற்று தமிழ்ப்புத்தாண்டு, இன்று புனிதவெள்ளி மற்றும் நாளை சனிக்கிழமை, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என 4 நாட்கள் தொடர் விடுமுறை உள்ளதால் கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கம கடற்கரை பகுதியில் நேற்றும், இன்றும் அதிகாலை சூரிய உதயம் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அதிகாலை சூரிய உதயத்தை கண்டு களித்தபின், முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் இட்டும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

இதுபோல கன்னியாகுமரி பகவதி அம்மன் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில்களிலும் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது மேலும் கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டனர் கன்னியாகுமரியில் உள்ள பிற சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப்பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன்காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.  சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் 25 நாட்களாக களைகட்டி வரும் கன்னியாகுமரியில், நாளை மற்றும் நாளை மறுநாளும் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் விடுமுறையால் பல்வேறு இடங்களில் பணியாற்றுவோர் சொந்த ஊர்களுக்கு வந்துள்ளதால், அவர்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து ஜாலியாக பொழுதை கழிப்பர் இதையொட்டி சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் அவர்களை நம்பியுள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுபோல இங்குள்ள லாட்ஜ்களும் நிரம்பி வழிகின்றன.

Tags : Kannyakumar , Series Holidays Kanyakumari, Crowded Tourists
× RELATED கன்னியாகுமரியில் ஆக்ரமிப்பு கடைகள் அகற்றம்