கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொரோனா தாக்கம் காரணமாக, அவ்வப்போது தடை விதிக்கப்பட்டாலும், ஓரளவு சுற்றுலா பயணிகள் வருகை உள்ளது. தற்போது ஆங்கில புத்தாண்டையொட்டி கடந்த 31, 1, 2 ஆகிய தேதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் 3ம் தேதிமுதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தற்போது கன்னியாகுமரி களைகட்ட தொடங்கி உள்ளது.
வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கம பகுதியில் சுனாமி பூங்கா அருகே 34 கடைகள் ஆக்ரமித்து கட்டப்பட்டிருந்தன. இதனால் கடற்கரையில் இருந்து பகவதி அம்மன் கோயிலை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லவும் கடும் சிரமம் ஏற்பட்டது. இதுதொடர்பாக இந்து அறநிலையத்துறை சார்பில், பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும் ஆக்ரமிப்பாளர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் கலெக்டர் அரவிந்த் கடந்த வாரம் கன்னியாகுமரியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கடற்கரையில் உள்ள ஆக்ரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இன்று காலை, அந்த ஆக்ரமிப்பு கடைகளை அகற்ற இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள், ‘கடைகளில் பல லட்சம் மதிப்பிலான பொருட்களை விற்பனைக்கு ைவத்துள்ேளாம். நீங்கள் ஆக்ரமிப்புகளை அகற்றினால் அவை அனைத்தும் நாசமாகிவிடும். எனவே நாங்களே காலி செய்து விடுகிறோம்’ என கேட்டுக்கொண்டனர். இதற்கு அதிகாரிகள் ஒத்துக்கொள்ளவே, கடைகளை வைத்திருந்தவர்கள் தாங்களாகவே ஆக்ரமிப்புகளை அகற்றினர்.
இந்து அறநிலையத்துறை சார்பில் இணை ஆணையர் ஞானசேகர், கோயில் மேலாளர் ராமச்சந்திரன் உட்பட அதிகாரிகள் வந்திருந்தனர். கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா தலைமையில், இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆக்ரமிப்பு அகற்றும் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.