×

உத்தரவுகளை அமல்படுத்தாமல் அலட்சியம் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நூதன தண்டனை: ஆந்திரா ஐகோர்ட் அதிரடி

திருமலை: நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத  8 ஐஏஎஸ் அதிகாரிகளை சமூக  நலத்துறை விடுதிக்கு சென்று சேவை செய்யும்படி என்று ஆந்திர உயர் நீதிமன்றம் நூதன தண்டனை விதித்துள்ளது.ஆந்திர முதல்வராக ெஜகன் மோகன் பதவியேற்றதும் ஒவ்வொரு கிராமத்திலும், கிராம மற்றும் வார்டு செயலகங்கள் அமைத்து உத்தரவிட்டார். அவற்றில் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டங்கள், சான்றுகள் வழங்கப்படுகின்றன.ஆனால், போதிய கட்டிட ஏற்பாடுகளுடன் இந்த திட்டத்தை உருவாக்காததால் ஆங்காங்கே உள்ள அரசு பள்ளி உள்ளிட்ட கட்டிடங்களில் இது செயல்படுகிறது. இதனால், பள்ளிக்குள் வெளிநபர்கள் வந்து ெசல்லும் நிலை ஏற்படுவதால், மாணவர்களின் கல்வி பாதிப்பதாக கூறி, கடந்த 2020ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், அரசு பள்ளிகளில் உள்ள செயலகங்களை உடனடியாக அகற்றும்படி உத்தரவிட்டது. ஆனால், இதற்கான பொறுப்பில் இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேர் அமல்படுத்தவில்லை.

இந்த வழக்கை நேற்று முன்தினம் ஆந்திர உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்தது. அப்போது, ‘அதிகாரிகளின் அணுகுமுறை நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிப்பது சரியல்ல. நீதிமன்ற உத்தரவுகளை அவமதித்த 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் 2 வாரம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது,’ என நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பு அளித்தனர். இதை கேட்டு அதிர்ந்த அரசு தரப்பு வழக்கறிஞர்கள், சிறை தண்டனையை மறுபரிசீலனை செய்து வேறு தண்டனை வழங்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்ற நீதிபதிகள்,‘ சிறை தண்டனைக்கு பதிலாக ஒரு வருடத்திற்கு மாதத்தில் ஒருநாள் சமூக  நலத்துறை விடுதிக்கு சென்று இந்த அதிகாரிகள் சேவை செய்ய வேண்டும்.மேலும், ஒரு  வருடத்திற்கு விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு தினசரி ஒருவேளை உணவு செலவை ஏற்க வேண்டும்,’ என  உத்தரவிட்டனர். வழக்கமாக குற்றவாளிகளுக்குதான் இதுபோன்ற நூதன தண்டனை வழங்கப்படுவது உண்டு. ஆனால், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இதுபோல் தண்டனை விதிக்கப்பட்டது, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags : Negligence in enforcing orders New sentence for 8 IAS officers: Andhra ICC action
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயில்...