சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து எடப்பாடியிடமும் விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி மனு அளித்துள்ளார். இது குறித்து புகழேந்தி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளதைத் தொடர்ந்து ஆணையத்தை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடப்பாடியுடன் நானும் மருத்துவமனையில் இருந்துள்ளேன். நடந்தவைகள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும். மக்கள் பணம் 3 கோடி ரூபாய்க்கும் மேலாக இதுவரை இந்த ஆணையத்திற்கு செலவு செய்யப்பட்டிருக்கிறது. அப்போலோ நிர்வாகம் எதை மறைக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். ஆகவே மக்களின் பெயரால் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைப்பை ஏற்படுத்தி இரட்டை இலையை மீட்டு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பது ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் தெளிவாகிறது. எனவே எடப்பாடி பழனிசாமி ஆணையத்தை அமைக்கும்போது இந்த ஆணையம் அவசியம் என்பதை அரசு ஆணை மூலம் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விசாரிக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.