×

ராட்டர்டாம் ஓபன் டென்னிஸ் பைனல் சிட்சிபாசை வீழ்த்தி அலியாசைம் சாம்பியன்

ராட்டர்டாம்: ராட்டர்டாம் ஓபன் டென்னிஸ் பைனலில் நேர் செட்களில் சிட்சிபாசை வீழ்த்தி, ஆகர் அலியாசைம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். நெதர்லாந்தின் ராட்டர்டாம் நகரில் நடந்த ராட்டர்டாம் டென்னிஸ் ஓபன் பைனலில் ஏடிபி தரவரிசையில் 4ம் இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் ஸ்டெஃபனாஸ் சிட்சிபாசும், 9ம் இடத்தில் உள்ள கனடாவின் இளம் வீரர் பெலிக்ஸ் ஆகர் அலியாசைமும் மோதினர். இந்த தொடர் முழுவதும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி பைனலுக்கு முன்னேறிய சிட்சிபாஸ், பைனலில் அலியாசைமிடம் எதிர்ப்பே இல்லாமல் சரணடைந்துவிட்டார். நிதானமான அணுகுமுறை மற்றும் துல்லியமான பிளேஸ்மென்ட்டுகளில் கவனம் செலுத்தி, ஆட்டத்தை துவக்கிய அலியாசைம், பதற்றமே இல்லாமல் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார்.

முதல் செட்டை பறி கொடுத்த சோர்வில் இருந்த சிட்சிபாஸ், 2வது செட்டில் மிக மோசமாக ஆடினார். அவரது சர்வீஸ்களில் போதிய வேகம் இல்லை. வேகமான சர்வீஸ்களுக்கு முயன்ற போது, அவை கோட்டுக்கு வெளியே விழுந்தன. இதனால் 2வது செட்டை 6-2 என மிக எளிதாக கைப்பற்றி, நேர் செட்களில் சிட்சிபாசை, அலியாசைம் வீழ்த்தினார். சாம்பியன் பட்டத்தை வென்ற பின்னர் அலியாசைம் கூறுகையில், ‘‘கனவு, நனவாகி இருக்கிறது. இந்த நாள் என்னுடைய வாழ்வில் எப்போதுமே மறக்கமுடியாத நாளாக இருக்கும். இந்த ஆண்டு துவக்கமே நன்றாக இருக்கிறது.

ஜனவரியில் ஒரு ஏடிபி கோப்பையை வென்றேன். ஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாமில் காலிறுதி வரை முன்னேறினேன். இப்போது இந்த கோப்பையை கைப்பற்றி இருக்கிறேன். இதோடு நிறுத்திக் கொள்ளப் போவதில்லை. இன்னும் முன்னேற வேண்டும். அதற்கான பயிற்சிகளை தொடர்வேன். இந்த பைனல் போட்டியை பார்ப்பதற்கு என்னுடைய அம்மாவும், குடும்ப உறுப்பினர்களும் நேரில் வந்துள்ளனர். அவர்களுக்கு முன்னால் பெற்றுள்ள இந்த வெற்றி, எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்துள்ளது’’ என்று தெரிவித்தார்.

Tags : Aliasim ,Rotterdam Open , Rotterdam, Open Tennis, Chitsiba, Fall, Aliasim
× RELATED ராட்டர்டாம் ஓபன் டென்னிஸ்; பைனலில் சிட்சிபாஸ்-ஆகர் அலியாசைம் மோதல்