×

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி பதவியேற்பு: ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, அலஹாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார்.
பின்னர் அவர் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார்.  நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி சுதந்திர இந்தியாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 32வது தலைமை நீதிபதியாக  பதவியேற்றுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, தலைமை நீதிபதிக்கு பூங்கொத்து மற்றும் புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, தமிழக அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு அதிகாரிகள், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத்தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முக சுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, அரசு பிளீடர் பி.முத்துகுமார், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் கிருஷ்ணகுமார், நூலகர் ராஜேஷ், பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், அகில இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு பார்கவுன்சில் செயல் தலைவர் பிரிசில்லா பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில்  கடந்த  ஆண்டு ஜூன் முதல் அக்டோபர் வரை பொறுப்பு நீதிபதியாக பதவி வகித்துள்ள முனீஸ்வர்  நாத் பண்டாரி  2022ம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.



Tags : Muneeswar Nath Bandari ,Chief Justice ,Chennai High Court , Chennai High Court Muneeswar Nath Bandari sworn in as Chief Justice: Governor sworn in
× RELATED சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்