தேனி: ஆண்டிப்பட்டி அருகே தமிழ்நாடு அரசு வனவியல் கல்லூரியில் அமைந்துள்ள மான் பூங்காவில் புள்ளிமான்களின் எண்ணிக்கை பெருகி வருவதால் அவற்றை மேற்குத்தொடர்ச்சி மலைக்கு இடம்பெயர்த்த வேண்டுமென வனவிலங்கு ஆர்வலர்கள் பரிந்துரைக்கின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் முன்புறத்தில் உள்ள வனவியல் பயிற்சி கல்லூரியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு 200 ஹெக்டேர் பரப்பளவில் மான் பூங்கா துவங்கப்பட்டது. இங்கு புள்ளிமான்களுக்கு பிடித்தமான அகேசியாவடசால்,டெலிரியா என்ற தாவரம் அதிகளவில் உள்ளது.
அதுமட்டுமின்றி தமிழக அரசின் சார்பில் 5 ஏக்கர் பரப்பளவில் பராமரிக்கப்பட்டு வரக்கூடிய பசும்புல் பண்ணைகளிலிருந்து பெறப்படும் பசுந்தீவனங்களும், புண்ணாக்கு, தவிடு போன்ற உணவுகளும் மான்களுக்கு உணவாக அளிக்கப்படுகின்றன.புள்ளிமான்களின் உடல்நிலை கால்நடை மருத்துவர் மூலம் தினசரி பரிசோதிக்கப்படுகிறது. இந்நிலையில் 2 மான்களுடன் துவங்கப்பட்ட பூங்காவில் தற்போது 380 புள்ளிமான்கள் பல்கி பெருகி இருக்கின்றன. எனவே மான் பூங்காவில் உள்ள மான்களை மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதியில் விட வேண்டுமென வனவிலங்கு ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுகின்றனர். வனவியல் கல்லூரி நிர்வாகத்தின் முறையான மற்றும் சிறப்பான பராமரிப்பே மான்களின் பெருக்கத்திற்கு காரணம் என கூறும் வனஉயிரின ஆர்வலர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.