சென்னை: தேனாம்பேட்டை மண்டலத்தில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் திட்டப்பணியினை சேப்பாக்கம்-திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி நேற்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-120க்குட்பட்ட முத்தையால் தெருவில் ரூ.3.04 கோடி மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் திட்டப்பணியினை சேப்பாக்கம்-திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமை வகித்தார். இந்த ஆரம்ப சுகாதார நிலையம் 700.94 ச.மீ. அளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்படவுள்ளது. இந்தப் பணிகள் 18 மாத காலத்திற்குள் முடிவுற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்திய வட்டார துணை ஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமைப் பொறியாளர் (கட்டடம்) காளிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.