×

ஓமலூர் அருகே பரபரப்பு அம்பேத்கர் சிலை உடைப்பு: சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

ஓமலூர்: ஓமலூர் அருகே அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதனை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரியும் நேற்று பொதுமக்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் கிராமத்தில் ஏர்போர்ட் காலனி உள்ளது. இங்கு, கடந்த 5 ஆண்டுக்கு முன்பு அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, இந்த அம்பேத்கர் சிலையின் வலது கையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். நேற்று காலை அந்த வழியாக  சென்றவர்கள், சிலையில் கை உடைந்திருப்பதை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில், போலீசார சென்று விசாரணை நடத்தினர்.

இதனிடையே, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை காமலாபுரம் ரவுண்டானா பகுதியில்  மறியலில் ஈடுபட்டனர். அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யும் வரை மறியலை கைவிட மாட்டோம் எனக் கூறினர். தகவலறிந்து போலீசார் வந்து அவர்களிடம், சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Ambedkar ,Omalur , Omalur, Ambedkar statue, road block, traffic
× RELATED குள்ளஞ்சாவடி அருகே நள்ளிரவில்...