ஹூஸ்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன் - மனிகா பத்ரா இணை காலிறுதிக்கு தகுதி பெற்றது.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கனாக் ஜா (அமெரிக்கா) - மான்யூ வாங் (சீனா) இணையுடன் மோதிய சத்யன் - மனிகா ஜோடி 15-17, 10-12 என்ற கணக்கில் முதல் 2 செட்களை இழந்து பின்தங்கினாலும், பிறகு அதிரடியாக விளையாடி அடுத்த 3 செட்களையும் 12-10, 11-6, 11-7 என்ற கணக்கில் கைப்பற்றி காலிறுதிக்கு தகுதி பெற்றது. இந்தியாவின் அசந்தா சரத் கமல் - அர்ச்சனா காமத் ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரான்சின் இம்மானுவேல் லெபெஸ்ஸன் - ஜியா நன் யூவன் இணையிடம் 4-11, 8-11, 5-11 என நேர் செட்களில் போராடி தோற்றது. மகளிர் இரட்டையர் பிரிவில் ஹங்கேரியின் டோரா - ஜார்ஜினா ஜோடியுடன் மோதிய மனிகா - அர்ச்சனா இணை 11-4, 11-9, 6-11, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி காலிறுதிக்கு முன்னேறியது.