திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடி நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்த விவகாரத்தில், பாஜ தலைவர் அண்ணாமலை மிரட்டுகிறார் என திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடந்த 5ம் தேதி பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜ நிர்வாகிகள் அறநிலையத்துறை இணை ஆணையர் மாரிமுத்து உதவியுடன் கேத்தரிநாத்தில் உள்ள சங்கராச்சாரியார் மடாலயத்தின் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்து, அனுமதியில்லாமல் கூட்டம் நடத்தியதாக திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், ரங்கராஜன் நரசிம்மன் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது: கடந்த 5ம்தேதி ரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள தாயார் சன்னதி முன்பு உள்ள மண்டபத்தில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் சேர்ந்து பிரதமர் மோடி பேசிய நிகழ்ச்சியை கோயிலுக்கு உள்ளே ஒளிபரப்பினர். இதை தட்டிக்கேட்டால், என்ன தவறு என்று கேள்வி எழுப்புகின்றனர்.
தொடர்ந்து பாஜவில் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களில் ‘‘டிரால்’’ செய்கிறார்கள். ஒரு தனிமனிதனை மிரட்டுவது சட்டப்படி குற்றம். இதற்கு முழு பொறுப்ைப அண்ணாமலை ஏற்க வேண்டும். என் மீது யாராவது தாக்குதல் நடத்தினால், அதற்கு முழு முதற்காரணம் அண்ணாமலை என்பதை தெரிவித்து கொள்கிறேன். இதை எனது வாக்குமூலமாகவே எடுத்துக்கொள்ளலாம். இதில் 2 பேர் போனில் பேசி ‘‘லாரியை வைத்து தட்டி விடுவேன்’’ என்கின்றனர். உயிர் போவதை பற்றி கவலைப்படும் சாமானியன் நான் இல்லை. வழிபாட்டு தலங்களை தவறாக பயன்படுத்துவதில் இருந்து காப்பதற்காக 1988ல் சட்டம் இயற்றப்பட்டது. இதன் பிரிவு ‘‘3 ஏ’’ வில், எந்த ஒரு வழிபாட்டு தலத்தையும் எந்த ஒரு அரசியல் கட்சியின் பிரசாரத்திற்கு பயன்படுத்த கூடாது. அப்படி ஒருவர் வழிபாட்டு தலத்தை பயன்படுத்தினால் மேனேஜருக்கும், அனைவருக்கும் அதிகபட்சம் 5 ஆண்டுகள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கலாம் என சொல்கிறது.
வழிபாட்டு தல மேனேஜரை உடனடியாக பணி நீக்கம் செய்து, 6 ஆண்டுகள் வரை அவர் எந்த கோயிலுக்கும் மேனேஜராக இருக்க கூடாது. அதை போல், தமிழ்நாடு கோயில் நுழைவு சட்டம் விதி 8,‘‘ஒரு கோயில் இடத்தில் வழிபாட்டுக்கு, பழக்க வழக்கத்திற்கு இல்லையோ, அந்த காரியங்களை நடத்தக்கூடாது என்று’’ சொல்கிறது. இந்த இரண்டையும் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மீறியிருக்கிறார். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.