சென்னை: பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உட்பட 19 துணை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால், மழையினால் ‘போனபைட்’ சான்றிதழ் பெற முடியாதவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களையாவது உடனே சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், ரேடியோ டெக்னாலஜி, ரேடியோ தெரபி, அனஸ்தீசியா, கார்டியாக் டெக்னாலஜி உட்பட 19 துணை மருத்துவப்படிப்புகள் உள்ளன.
இதில் அரசு கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களும், தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் 13 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களும் உள்ளன. இதற்கான 2021-22ம் கல்வியாண்டுக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கான அவகாசம் அக்டோபர் 25ம் தேதி தொடங்கி நேற்று வரை வழங்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் செயலர், தேர்வு குழு எண் 162, ஈவெரா பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரியில் நவம்பர் 10ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என மருத்துவ மாணவர் சேர்க்கை குழு அறிவுறுத்தியது. அதன்படி, இதுவரை 55 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது. கனமழையால், பள்ளிகள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் பள்ளிகளில் ‘போனபைட்’ சான்றிதழ் பெற முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘போனபைட் சான்றிதழை மழை காரணமாக பெறமுடியாத மாணவர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களையாவது உடனடியாக இயக்குனரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை கவுன்சலிங்கின் போது போனபைட் சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிப்பவர்கள் மட்டுமே தகுதியானவர்கள்’ என்று கூறினர்.