சென்னை: தமிழகத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நசீம்பி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்குப்பெட்டிகளின் மீது வைக்கப்படும் முத்திரைகள், வேட்பாளர்களின் முன் அகற்றப்பட வேண்டும் என்பதை மீறி, சில வார்டுகளின் வாக்குப்பெட்டிகளின் முத்திரைகள் ஏற்கனவே அகற்றப்பட்டிருந்தது.இதுசம்பந்தமாக எதிர்ப்பு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நசீம்காத்து என்பவரின் வெற்றியை எதிர்த்து விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கையின் போது பதிவுசெய்யப்பட்ட வீடியோ காட்சிகளையும், கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் பாதுகாக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வீடியோ பதிவுகள், தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து 45 நாட்கள் பாதுகாக்கப்படும் எனவும், வீடியோ பதிவுகளை பாதுகாக்கும்படி, தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசுத்தரப்பிலும், மாநில தேர்தல் ஆணையம் தரப்பிலும் விளக்கமளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கையின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை 60 நாட்கள் வரை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டனர்.என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.