சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த மூதாட்டி திடீரென சாமியாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை அருகே நாலுகோட்டை கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
மனுவில், ‘‘எங்கள் நாலுகோட்டை கிராமம் ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.
இங்கு ஸ்ரீஅதிகுந்தவரத அய்யனார், காளி, கருப்பையா கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் புரவி எடுப்புவிழா பன்னெடுங்காலமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டும் கொரோனா விதிமுறையை பின்பற்றி திருவிழா நடத்த தயாராகி வருகிறோம். ஆனால் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக திருவிழாவை நடத்த விடாமல் சிலர் தடுத்து மிரட்டுன்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கிராம தெய்வம், குல தெய்வத்திற்கு புரவி எடுப்பு விழா நடத்த அரசு விதிமுறைப்படி அனுமதி அளிக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தனர்.
மனு கொடுக்க வந்த பெண்களில் ஒரு மூதாட்டி, திடீரென சாமி வந்து சிறிது நேரம் ஆடினார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.